உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க: துறை அதிகாரிகள் கவனம் செலுத்தலாமே

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க: துறை அதிகாரிகள் கவனம் செலுத்தலாமே

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்கள் உள்பட பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் 5 வருடங்களுக்கு முன் கணக்கெடுப்பின் படி பொதுப்பணித்துறை குளங்கள் 295, ஊராட்சி குளங்கள் 605, ஊராட்சி ஒன்றிய குளங்கள் 435, டவுன் பஞ்சாயத்து குளங் கள் 11, தனியார் குளங்கள் 11 என 1401 உள்ளன.ஆனால் பல்வேறு காரணங்களால் குளங்கள் துார்வாரப்படாமலும், முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. பல இடங்களில் கணக்கில்லாமல் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி குளங்கள், கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடங்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த ஆறு உருவாகும் இடத்தில் இருந்தே கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. காமாட்சிபுரம் ஆவினக்குளம் கருவேலஞ்செடிகள் அதிகளவில் இருப்பதால் நீர் உறிஞ்சி அவை நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் பயிர்களுக்கு வழியில்லை. ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோயில் குளம், பாலகிருஷ்ணாபுரம் குளம், திண்டுக்கல் ஏ.வெள்ளோடு பெரியகுளம், நரசிங்கபுரம் குட்டையாகுளம், செல்லமந்தாடி சந்தனவர்த்தினி ஆறு உள்ளிட்டவை பராமரிப்பின்றி கிடக்கிறது. பழநி வையாபுரி குளம், தட்டான் குளம், சண்முக நதி போன்றவை அமலைச் செடிகளாலும், குப்பை கழிவுகளாலும் நிரம்பிக் கிடக்கிறது. ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் கேட்பாரற்று உள்ளன. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை