உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதாள சாக்கடை அடைப்பால் வீட்டிற்குள்  புகுந்த கழிவுநீர் 12 நாட்களாக தவிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

பாதாள சாக்கடை அடைப்பால் வீட்டிற்குள்  புகுந்த கழிவுநீர் 12 நாட்களாக தவிக்கும் மக்கள்; கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தது. கவுன்சிலர், மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்து 12 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அருகில் வசிக்கும் மக்கள் நோய்த்தொற்று அச்சத்தில் அவதிக்குள்ளாகின்றனர்.திண்டுக்கல் ஜி.டி.என்., சாலை 17வது வார்டுக்குட்பட்ட அரசன் நகரை சேர்ந்தவர் சந்திரன் . சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இங்குள்ள வீட்டை வாடைக்கு விட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்துவிட்டனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மூக்கையா வீட்டிற்குள் கழிவுநீர்புகுந்தது. நாட்கள் செல்ல கழிவுநீர் மட்டம் அதிகரித்து அருகில் உள்ள வீடுகளுக்கு துர்நாற்றம் பரவ தொடங்கி பெரும் சுகாதார கேடு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ,வார்டு கவுன்சிலர் வெங்கடேஷன் மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். பல நாட்களாகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

சுவாசிக்க இயலவில்லை

ஓய்வு வி.ஏ.ஓ., தங்கராஜ் கூறுகையில், ''புகார் தெரிவித்து 12 நாட்களாகியும் பிரச்னைக்கு தீர்வு காண யாரும் வரவில்லை. துர்நாற்றம் வீசுவதால் இங்கு வசிக்க இயலவில்லை. பாதுகாப்பு கருதி எங்கள் குடியிருப்பில் வயதான இருவரை வேறு வீட்டில் தங்க வைத்துள்ளோம். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. டெங்கு போன்ற நோய்த் தொற்று பரவினால் என்ன செய்வது. துர்நாற்றம் வீசுவதால் வீட்டில் உணவருந்த, துாங்க, சுவாசிக்க கூட இயலவில்லை'' என்றார்.

நடவடிக்கை எடுத்து வருகிறோம்

மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் கூறுகையில்,'' வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்தது குறித்து இன்று (நேற்று)தான் தகவல் கிடைத்தது. உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளோம்''என்றார்.கவுன்சிலர் வெங்கடேஷன் கூறுகையில்,'' மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து 10 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. உதவிப் பொறியளர் தினமும் வந்து பார்த்துவிட்டு செல்கிறார். எஸ்.என்.பி., மெயின்ரோட்டில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கின்றனர். 3 வார்டுகளில் இணை கழிவுநீர் செல்லும் மெயின் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறோம்''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை