பயமுறுத்தும் பாம்புகள்; விளக்குகள் இன்றி இருள் விடிவு காலத்திற்காக ஏங்கும் கே.ஆர்.நகர் குடியிருப்போர்
திண்டுக்கல்: பல ஆண்டுகளாக போடப்படாத ரோடுகள், சாக்கடை இல்லாததால் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்,மழை நேரங்களில் சகதியாக மாறும் மண் ரோடுகளில் தடுமாறும் வாகன ஓட்டிகள், தெரு விளக்குகள் இல்லாமல் இருள் ,வீட்டிற்குள் புகும் விஷபாம்புகள் என ஏராளமான பிரச்னைகளுடன் திண்டுக்கல் - திருச்சி ரோடு கே.ஆர்.நகர் குடியிருப்போர் பாதிக்கின்றனர்.திண்டுக்கல் - திருச்சி ரோடு கே.ஆர்.நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணன்,பொருளாளர் வரதராஜ்,செயலாளர் யோகேஷ் கூறியதாவது:திண்டுக்கல் திருச்சி ரோடு கே.ஆர்.நகர் விரிவாக்கப்பகுதிகளான 6,7,8,9,10 உள்ளிட்ட தெருக்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ரோடுகள் அமைக்கவில்லை. களிமண் ரோடுகள் உள்ள நிலையில் மழை நேரங்களில் மக்கள் செல்ல முடியாமல் சகதியில் தடுமாறி விழுகின்றனர்.டூவீலர்களில் செல்வோரும் இதேபிரச்னையால் தவிக்கின்றனர். பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகத்தினர் இதுவரை சிமென்ட்,தார் ரோடுகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவசர தேவைக்கு கூட இங்குள்ள மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். இங்கு தெரு விளக்குகள் இல்லாமலிருப்பதால் இரவில் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். சிலர் மது குடிப்பது,திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குடிதண்ணீர் வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதால் அனைவரும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால் மக்களை கண்டாலே துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து கடிக்கின்றன. மழை நேரங்களில் மழைநீர்,கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமலிருப்பதால் ரோடுகளில் மழைநீர் மாதக்கணக்கில் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகிறது .இதன்மூலம் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குப்பை அள்ளுவதற்கு கூட துாய்மை பணியாளர்கள் வராததால் அதற்கும் நாங்களே ஆள் வைத்துள்ளோம். கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. ஊராட்சி நிர்வாகத்தினர் எங்கள் பகுதியில் தண்ணீர்,வடிகால்,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை நேரமாக இருப்பதால் பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்துகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.