| ADDED : செப் 05, 2025 02:38 AM
நத்தம்:திண்டுக்கல் மாவட்டத்தில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது, வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை கடித்து கொல்வது, நடந்து செல்வோரை துரத்தி குதறுவது என இதன் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தினம் தினம் அச்சத்தில் அலறும் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் நகர், புறநகர், கிராமப் பகுதி ரோடு, தெருக்களில், தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதை கண்டாலே மக்கள் பதறும் நிலை தொடர்கிறது. ரோடுகளில் படுத்திருக்கும் நாய்கள் டூவீலர் ஓட்டிகளை கண்டாலே விரட்டி கடிக்க பாய்கிறது. தனியாக நடந்து செல்வோரை கண்டாலே துரத்துவது, கடித்து குதறுவது என நாய்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினம் தினம் ஒன்று முதல் ஐந்து பேர் வரை அந்தந்தப்பகுதி மருத்துவ மனைக்கு நாய்கடியால் சிகிச்சை பெற வருகின்றனர். நாய்களின் தொல்லைநாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தாலும் இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் மக்களின் அலறலை கண்டுக்காமல் உள்ளது. இது ஒரு புறம் இருக்க சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அதிகம் நடக்கிறது. கோயில் வளாகங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளிலும் பயணிகளை விரட்டி கடிப்பதால் அவதிக்குள்ளாகின்றனர். கிராமப்புறங்களில் வீடு, தோட்டங்களில் வளர்க்கப்படும் கோழி, ஆடு போன்ற உயிரினங்களையும் கடித்து கொன்று விடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் தொடர்ந்து கோரி வருகின்றனர்.