கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் மறியல்-
செந்துறை; திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே கூடுதல் பஸ்வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று கிராம பகுதிகளான கோட்டைபட்டி ,திருநுாத்துபட்டி, நயினாகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை 7:40 மணிக்கு துவரங்குறிச்சியிலிருந்து செந்துறைக்கு அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் நிற்காமல் செல்கிறது. கூடுதல் பஸ்கள் கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர் திருநுாத்துபட்டி பிரிவு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். வருவாய், போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர். 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. செந்துறை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.