ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கடத்தல் தப்பியோடிய இருவருக்கு வலை
திண்டிவனம் : திண்டிவனம் அருகே புதுச்சேரியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்களை கடத்தி வந்த வாகனத்தை நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு போலீசார் மற்றும் மது விலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், நேற்று காலை 6.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் வாகன சோதனை நடத்தினர்.நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா உள்ளிட்ட போலீசார், புதுச்சேரி மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த பொலிரோ பிக்அப் வேனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.போலீசாரை பார்த்த உடன், வேனை நிறுத்திவிட்டு டிரைவர் உட்பட இருவர் தப்பியோடினர்.போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில், 150 அட்டைப் பெட்டிகளில் சுமார் 3 ஆயிரம் உயர்ரக மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும். விசாரணையில், சென்னையிலுள்ள பிரபல ஓட்டலில் விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வது தெரிய வந்தது.வாகனம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிம் ஒப்படைத்தனர்.மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவர் புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த கவியரசன் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடலுார், புதுப்பேட்டையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கவியரசன் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.மதுபானம் கடத்தல், கஞ்சா, போலி மதுபானங்கள் குறித்து கட்டணமில்லா மொபைல் எண் 94984 10581ல் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.