விளை நிலங்களில் புகுந்த யானைகளால் மக்கள் பீதி
சத்தியமங்கலம், : தாளவாடி அருகே, அருளவாடி கிராமத்தில் பட்டப்பகலில் விவசாய நிலங்களில், கூட்டமாக உலா வந்த யானைகளால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.தாளவாடி அருகே, அருளவாடி கிராமம் ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்டது. இந்த பகுதி தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் உணவு, தண்ணீர் தேடி கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் அருளவாடி கிராமத்தில் விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். மேலும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட, ஜீரகள்ளி வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.