கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி
கொடிவேரியில் ஒரே நாளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பலிடி.என்.பாளையம், நவ. 3-கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த அழகுராஜன் மகன் ஹரிராஜன், 20; கோவையில் தனியார் கல்லுாரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில், மூன்றாமாண்டு படித்து வந்தார். குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கட்டுக்கு நேற்று வந்தார். அணைக்கட்டு அருகில் செல்லும் பவானி ஆற்றில் குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். குடும்பத்தினர் கூச்சலிடவே அப்பகுதியில் குளித்த சிலர், ஹரிராஜனை மீட்டனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.பனியன் தொழிலாளி...திருப்பூர் மாவட்டம் அவினாசி, வடுகுபாளையத்தை சேர்ந்தவர் அங்கப்பன், 36, பனியன் கம்பெனி தொழிலாளி. இவரின் மனைவி ரம்யா, 25; தம்பதிக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை, ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. அங்கப்பன் தனது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு நேற்று வந்தார். மாலை, 4:௦௦ மணியளவில் பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். பங்களாபுதுார் போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொடிவேரி தடுப்பணை பகுதியில், ஒரே நாளில் இருவர் ஆற்றில் மூழ்கி பலியானது, சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.