நகைக்காக முதிய தம்பதி கொலை; உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
ஈரோடு:கொங்கு மண்டலத்தில், தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதியரை குறி வைத்து, கொடூரமாக கொலை செய்து, நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்வதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வகையில், சிவகிரியில் தம்பதியை கொடூரமாக கொலை செய்து, 10.5 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, 75. இவரது மனைவி பாக்கியம்மாள், 65. இருவரும் தோட்டத்தில் விவசாயம் பார்த்ததுடன், அங்கேயே வீடு கட்டி தனியாக வசித்தனர். தம்பதியின் மகன் கவிசங்கர், மகள் பானுமதி. இருவரும் திருமணமாகி திருப்பூர் மாவட்டம், முத்துாரில் வசிக்கின்றனர்.இரண்டு நாட்களாக மகன், மகள் போனில் தொடர்பு கொண்டபோது, ராமசாமி, பாக்கியம்மாள் அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பக்கத்து வீட்டில் வசிப்போர், தோட்டத்து வீட்டுக்கு சென்றபோது, வீட்டுக்கு வெளியே பாக்கியம்மாளும், வீட்டின் உள்ளே ராமசாமியும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மிகவும் அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஈரோடு எஸ்.பி., சுஜாதா, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.பாக்கியம்மாள் அணிந்திருந்த, 10.5 சவரன் நகை, பீரோவில் இருந்த, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் சில பொருட்கள் கொள்ளை போனதை உறுதி செய்தனர். இக்கொலை நடந்து நான்கு நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பெருந்துறை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. தம்பதியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., சுஜாதா உள்ளிட்ட போலீசார் பேச்சு நடத்திய பின், உடலை பெற்றுக் கொண்டனர்.எஸ்.பி., சுஜாதா கூறியதாவது:மேக்கரையான் தோட்டத்தில், முதிய தம்பதி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும், சம்பவ இடத்தில் விசாரணையை துவங்கி விட்டோம்.இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில், எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சந்தேகப்படும் இடங்களை நோக்கி விசாரிக்கின்றனர். 'சிசிடிவி' பதிவுகளை தனியாக ஆய்வு செய்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிப்போம். பாக்கியம்மாள் அணிந்திருந்த, 10 சவரன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வருகிறது. வீட்டில் இருந்த பணம் குறித்து சரியான தகவல் இல்லை.இவ்வாறு இவ்வாறு கூறினார்.'மாய உலகில் இருந்து வெளியே வாங்க ஸ்டாலின்'ராமசாமி - -பாக்கியம்மாள் தம்பதி படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறை மானிய கோரிக்கையின்போது, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசினார். இது தான் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல்,ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. இவற்றை, 'தனிப்பட்ட ஒன்று, இரண்டு விஷயங்கள்' என்று சொல்ல, தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக மக்கள் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல், உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தி.மு.க., அரசு தள்ளியுள்ளது. இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் - ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முதல்வர் முறையாக செய்ய வேண்டும்.- - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்மெத்தனம் இல்லைஈரோட்டில் இரட்டை கொலை தகவல் கிடைத்ததும், போலீசார் நடவடிக்கையை துவங்கிவிட்டனர். மெத்தனமாக அரசு செயல்படுவதாக பழனிசாமி கூறுவது, அவரது வழக்கமான பேச்சு. அரசு தரப்பு மிக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிப்படைகள் அமைத்து விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர். சில குற்றச்சம்பவங்களில், 8 மணி நேரத்தில் கூட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.- - முத்துசாமி, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர்பாதுகாப்பை உறுதி செய்யுங்க ஏற்கனவே நடந்த கொலை, கொள்ளையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே, தற்போதைய கொலைக்கு காரணம். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முழங்கிய, அடுத்த இரு நாட்களில் நடந்துள்ள இரட்டைக்கொலை சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்குவதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.- - தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்நம்பிக்கை சிதைந்து விடும்தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கில், இன்னும் எந்த தடயத்தையும் தி.மு.க., அரசு கண்டுபிடிக்கவில்லை. கொங்கு பகுதியில் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள், அச்சத்தில் உறைய வைப்பதோடு, தி.மு.க., ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை குற்றங்களால், மக்களுக்கு சட்டம் - ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளது.-- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர் அரசின் கடமைதமிழகத்தில் அண்மை காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும்,அதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை மாற்றி, மக்களிடம் நம்பிக்கையையும்,பாதுகாப்புஉணர்வையும் ஏற்படுத்த வேண்டியது,தமிழக அரசின் கடமை.- அன்புமணி, பா.ம.க., தலைவர்
ஒரே மாதிரியான கொலைகள்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஒரு தம்பதி சில மாதங்களுக்கு முன் அடித்து கொலை செய்யப்பட்டனர். அதுபோல, பல்லடத்திலும் மூன்று பேர் தோட்டத்து வீட்டில் கொல்லப்பட்டனர். அதே பாணியில், தடி, இரும்பு கம்பி போன்றவைகளால் தாக்கி தற்போதைய கொலை சம்பவமும் நடந்துள்ளது. மூன்று கொலை சம்பவங்களும், வாய்க்கால் கரையை ஒட்டிய பகுதியில், தனியாக உள்ள வீட்டில் வசிக்கும் தம்பதியை குறிவைத்து நடந்துள்ளது. ராமசாமி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று, 20 நாட்களுக்கு முன் இறந்துள்ளது. தற்போது கொலை நடந்துள்ளதால், எல்லாம் திட்டமிட்டதாகவே தெரிகிறது.இந்நிலையில், நேற்று மதியம் கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா, கிருஷ்ணிகிரி எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். கொலை நடந்த விதம், பயன்படுத்திய ஆயுதங்கள், தற்போதைய விசாரணை குறித்து கேட்டறிந்தனர்.
ஆயுத பயிற்சி தர எதிர்பார்ப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலர் முத்துவிஸ்வநாதன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ராமசாமி - பாக்கியம்மாள் படுகொலை ஒட்டு மொத்த விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அரச்சலுார், திருப்பூர் மாவட்டம், சேமலைகவுண்டன் பாளையத்தில், தோட்டத்தில் தனியாக வசித்த வயதான விவசாய தம்பதியர், பணம், நகைக்காக கொடூரமாக சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்டுள்ளனர். சேமலைகவுண்டன் பாளையத்தில் இதேபோல மூன்று பேர் கொல்லப்பட்டனர். போலீசார் தனிப்படை அமைத்தும், இதுவரை துப்பு துலங்கவில்லை. அதற்குள் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. உத்தரபிரதேசம், காஷ்மீர், பீஹாரில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்தபோது, விவசாயிகள், பொதுமக்களை காக்க, இளைஞர்களை தேர்வு செய்து, ஆயுத பயிற்சி வழங்கினர். நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டன. குற்றவாளிகள், கொலையாளிகளை பிடிக்க முடியாததும், தொடர் கொலைகள் நடப்பதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியையும், போலீசாரால் சரியாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இழப்பும் ஏற்பட்டுள்ளது. கிராமத்து இளைஞர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கி, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் திருப்பூர் ஈஸ்வரன்: அடிக்கடி கொலை நடப்பதால், விவசாய தோட்டங்களில் உள்ள வீட்டில் வசிக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதுள்ளது.ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தோட்டங்களில் எப்படி வாழ முடியும் என, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், போராட வேண்டிய நிலை உருவாகும்.