போதையில் கிணற்றில் குதித்த தந்தை சாவு; மகளுக்கு சிகிச்சை
அந்தியூர் அந்தியூர் அருகே சின்ன பருவாச்சி, ஒட்டபாளையத்தை சேர்ந்தவர் ராணி, 35, கூலி தொழிலாளி. கணவர் மாரசாமி ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் தந்தை மாதேஸ்வரனுடன், 60, வசித்து வருகிறார். கூலி தொழிலுக்கு செல்லும் இருவருக்கும், மது குடிக்கும் பழக்கம் இருந்தது. வேலை முடிந்து வரும்போது, குவார்ட்டர் வாங்கி வந்து வீட்டில் ஒன்றாக குடிப்பார்கள். நேற்று மாலை வழக்கம்போல் இருவரும் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், தற்கொலை செய்து கொள்வதாக கூறி, ராணி கதவை சாத்தி கொண்டார். இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மாதேஸ்வரன் கூறியதால் வெளியே வந்தார்.அதே பகுதியில் உள்ள பாண்டுரங்கன் என்பவரது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள இருவரும் சென்றனர். 100 அடி ஆழ வறண்ட கிணற்றில், கைகளை ஒன்றாக கோர்த்தபடி குதித்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்தியூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதில் பலத்த காயங்களுடன் ராணி மீட்கப்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஸ்வரன் இறந்து விட்டதால் சடலமாக மீட்டனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.