10 சதவீத கூலி உயர்வு வாழ்வாதாரத்திற்கு போதாது சென்னிமலை பகுதி கைத்தறி நெசவாளர்கள் வேதனை
சென்னிமலை:கைத்தறி துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், 10 சதவீத கூலி உயர்வு என்பது, ஆண்டுதோறும் வெளியாகும் கண்துடைப்பு அறிவிப்பு என, நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கைத்தறி துறை மானிய கோரிக்கையில்,' நெசவாளர்களுக்கு அகவிலைப்படி, 10 சதவீதம்; அடிப்படை கூலி, 10 சதவீதம் உயர்த்தப்படும்' என, கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிவித்தார். மானிய கோரிக்கை அறிவிப்பு இம்முறை பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூலி விவகாரத்தில், ஆண்டுதோறும் வழங்கப்படும், 10 சதவீத கூலி உயர்வு ஏமாற்றம் அளிப்பதாகவும், ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிவிப்பு, ஒரு கண்துடைப்புதான், எந்த வகையிலும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காது என, நெசவாளர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, சிரகிரி கைத்தறி நெசவாளர் சங்க முன்னாள் தலைவர் இளங்கோ ரவி கூறியதாவது : தற்போது, கூலி உயர்வும் போதுமானதாக இல்லை. கைத்தறி துறை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. அடிப்படை கூலியும், அகவிலைப்படி உயர்வும், நடைமுறையில் கணக்கிடும்போது, நெசவாளர்களுக்கு ரகத்திற்கு ஏற்ப சில நுாறு ரூபாய் மட்டுமே கிடைக்கும்.இதை வைத்து, நாங்கள் காய்கறி கூட வாங்க முடியாது. இன்றைய காலத்தில், மருத்துவ செலவு, பள்ளி கட்டணம், மளிகை, பால் என அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது.கூலி உயர்வு என்பது, 20 சதவீதமாக உயர்த்தியிருக்க வேண்டும். சங்கங்கள் இந்த உயர்த்தப்பட்ட கூலியை வழங்க முடியவில்லை என்றால், அதற்கான கூடுதல் செலவினங்களை அரசு ஏற்க வேண்டும். மழைக்காலத்தில், நெசவாளர்களுக்கு உதவித்தொகை தருவதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை உதவித்தொகை ஏதும் வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கு ஏமாற்றம் என்பது, பழகி போனதாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினர்.