யூனியன் அலுவலகத்தில் 2வது முறையாக கல்வெட்டு பஞ்., தலைவர்களால் யூனியனில் மீண்டும் பரபரப்பு
பெருந்துறை, ஜன. 1-பெருந்துறை யூனியனில் ஒன்றிய கவுன்சிலர்கள், 12 பேர் உள்ளனர். இதில் ஆறு பேர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், ஆறு பேர் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். சேர்மேனாக சாந்தி ஜெயராஜ், துணை சேர்மேனாக உமா மகேஸ்வரன் உள்ளனர். இவர்கள் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். யூனியனில், 29 பஞ்சாயத்துகள் உள்ளன. இவர்கள் தாங்கள் பணியாற்றிய காலத்தை நினைவு கூறும் வகையில், பெருந்துறை யூனியன் அலுவலக கீழ் தளத்தில், 12 யூனியன் கவுன்சிலர்கள் நினைவு கல்வெட்டு வைத்தனர். இதைப்பார்த்து, 29 பஞ்சாயத்து தலைவர்களும், யூனியன் அலுவலக முதல் தளத்தில் கல்வெட்டு வைத்தனர். இதை சேர்மேன் உத்தரவின்படி அகற்றப்பட்டது. இதையறிந்த, 29 பஞ்., தலைவர்களும், கடந்த, 23ல் யூனியன் அலுவலகத்துக்கு வந்தனர். பி.டி.ஓ., மற்றும் சேர்மேனை கண்டித்து கோஷமிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பஞ்., தலைவர்கள் சேர்ந்து, யூனியன் அலுவலகத்தின் முன்புறம் ஒரு கல்வெட்டு வைத்தனர். இதையறிந்த பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளாததால், கலெக்டரை சந்தித்து முறையிடுமாறு அறிவுறுத்தி சென்றார். கல்வெட்டு பிரச்னையால் யூனியன் அலுவலகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.-----