நடுவானில் மிரட்டல்; விமான பயணி கைது
நடுவானில் மிரட்டல்; விமான பயணி கைதுராய்ப்பூர், நவ. 15மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து நேற்று காலை 7:20 மணிக்கு இண்டிகோ விமானம் 100க்கும் மேற்பட்ட பயணியருடன் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவிற்கு புறப்பட்டது. வானில் பறக்க துவங்கி 10 நிமிடங்கள் ஆன நிலையில், விமானத்தில் இருந்த பயணி ஒருவர், பணிப்பெண்ணிடம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான போக்குவரத்து நடைமுறைப்படி, விமானத்தை அருகில் உள்ள சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். அங்கு பயணியர் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, விமானத்தை பணிமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், பயணியரின் உடைமைகள் உள்ள பகுதி, கழிவறை என விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர். இறுதியில் பயணியின் குற்றச்சாட்டு பொய் என தெரியவந்தது.இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணியை ராய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். நான்கு மணி நேர தாமதத்திற்கு பின் இண்டிகோ விமானம் கோல்கட்டா புறப்பட்டுச் சென்றது.