ஊர் திரும்பாத வடமாநில தொழிலாளர்கள் அரசுப்பணிகளில் சுணக்கம்தொழிற்சாலைகளில் பாதிப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம் ஓடை விரிவாக்கம், சோலாரில் புது பஸ் ஸ்டாண்ட் பணி, மத்திய பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி முடிந்து, 10 நாட்களாகியும் ஈரோடு திரும்பவில்லை. இதனால் மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டு வந்தனர். இதில் பெரும்பாலானோர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் பலர் திரும்பவில்லை.தற்போது, தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்ற வடமாநிலத்தொழிலாளர்களும் இதுவரை வரவில்லை. ஈரோட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை போலவே, அவர்களது சொந்த மாநிலத்திலும் வழங்க அம்மாநில அரசுகள் முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். எனவே சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு கூறினர்.