கள்ளிப்பட்டி அடையாளத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு தீர்ப்பு நகலை கேட்டதால் அதிகாரிகள் ரிட்டர்ன்
டி.என்.பாளையம், நவ. 9-டி.என்.பாளையம் அருகேயுள்ள கள்ளிப்பட்டியில், சத்தி - அத்தாணி சாலையில், அரசமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நுாற்றாண்டு பழமையான விநாயகர் சிலை, அரசமரம் உள்ளது. இதன் அருகில் மகாதேவன் மனைவி ஜெயலட்சுமிக்கு சொந்தமான கடை, வீடு உள்ளது. தங்கள் நிலத்தில் கோவில் மற்றும் அரசமரம் உள்ளதாக, ஜெயலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர், பங்களாபுதுார் போலீசார் உதவியுடன், சிலை மற்றும் அரசமரத்தை அகற்ற நேற்று காலை வந்தனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நுாற்றுக்கணக்கானோர் திரண்டனர். அதிகாரிகளுடன், ௧௦:௦௦ மணி முதல், ௧௨:௦௦ மணி வரை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிலை மற்றும் அரசமரத்தை அகற்றாமல், அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கள்ளிப்பட்டியின் அடையாளமாக இந்த இடத்தில் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை, அரசமரம் உள்ளது. இது இரண்டும் மாரப்ப கவுண்டர் பெயரில், 0.75 செண்ட் இடத்தில் உள்ளது. இதற்கு, 1979ல் மின் இணைப்பு பெற்றோம். இந்த கோவில் நிர்வாக குழு தலைவராக இருந்த முத்துசாமி இறந்துவிட்ட நிலையில் ஊர்மக்கள் நிர்வாகிக்கிறோம். இதன் அருகில் ஜெயலட்சுமிக்கு சொந்தமான கடை, வீடு உள்ளது. அவர் தரப்பில் ஆக்கிரமிப்பு என வழக்கு தொடுத்து, தீர்ப்பும் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆக்கிரமிப்பு அகற்றவந்த அதிகாரிகளிடம், தீர்ப்பு நகலை கேட்டோம். அதை தராமல் அதிகாரிகள் திரும்பி சென்று விட்டனர்.இவ்வாறு கூறினர்.