சித்தோட்டில் விரைவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மஞ்சள், கொப்பரை, வெல்லம் சந்தைப்படுத்த திட்டம்
ஈரோடு, ஜன. 3-ஈரோடு விற்பனைக்குழு சார்பில் சித்தோட்டில் விரைவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, வெல்லம், தேங்காய், கொப்பரை தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளனர்.ஈரோடு விற்பனைக்குழுவின் கீழ், மாவட்டத்தில், 17 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், 18வது ஒழுங்கு முறை விற்பனை கூடம் சித்தோட்டில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது: சித்தோடு வாசவி கல்லுாரி அருகே, சொந்த கட்டடம், ஏலக்கூடம், பொருட்கள் இருப்பு வைக்கும் வளாக கட்டுமானப்பணி நிறைவடைந்துள்ளது. கடந்த மாதம் ஈரோட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து வைத்துள்ளார்.ஏலம், விளைபொருட்கள் இருப்பு வைத்தலுக்கான வசதி, வாகன நிறுத்தம் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விளைபொருட்கள் ஏல விற்பனை துவங்கும். இங்கு வெல்லம், தேங்காய், கொப்பரை தேங்காய், மஞ்சள் போன்ற விளை பொருட்களை ஏல விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.