உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி

வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி

ஈரோடு: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், தொடர்புடைய வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளியாக, ஈரோடு நீதிமன்றம் அறிவித்துள்ளது.கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீடு, ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனுாரில் உள்ளது. 2000ம் ஆண்டு ஜூலை, 30ல் இரவு பண்ணை வீட்டில் தங்கி இருந்த நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களான கோவிந்தராஜ், நாகப்பா, நாகேஷ் ஆகியோரை சந்தன மர கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் துப்பாக்கி முனையில் வனப்பகுதிக்குள் கடத்தி சென்றனர். தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரா கவுடா, சேதுமணி ஆகியோர் ஏற்கனவே, 2004ல் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய, 11 பேர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.வழக்கில் தொடர்புடைய கடலுார் மாவட்டம், நொச்சிக்குப்பம், பாப்பாயம்மாள் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (எ) தமிழ், 33, சம்பவம் நடைபெற்றதில் இருந்தே, 24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவ்வழக்கு, ஈரோடு மூன்றாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது. தலைமறைவாக உள்ள தமிழின் முகவரிக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஆனாலும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.கடந்த, 24 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக உள்ள ரமேஷ் (எ) தமிழை தலைமறைவு குற்றவாளியாக, மாஜிஸ்திரேட் அப்சல் பாத்திமா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி