| ADDED : பிப் 12, 2024 11:05 AM
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால், குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில், வெளியூர் சுற்றுலா பயணிகள், அதிகளவில் கொடிவேரி தடுப்பணைக்கு வருகின்றனர்.ஆனால், கடந்த ஜன., மாத கடைசி வாரம் முதல், பவானி ஆற்றில் வினாடிக்கு, 100 கன அடி மட்டுமே திறக்கப்படுவதால், தடுப்பணை வழியாக குறைந்தளவே தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வாரந்தோறும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வருகை சரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்றும் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியது. இதனால், 500க்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வந்தனர். அவர்களும் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். அதேசமயம் பரிசல் துறையும் வெறிச்சோடியது. தடுப்பணை வழியாக வினாடிக்கு, 500 கன அடி வெளியேறினால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.