மணல் கடத்திய 5 பேர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மணல் கடத்திய, 5 பேரை கைது செய்து, 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், மணியாற்றில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட, இரு ஈச்சர் லாரி மற்றும் 4 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தொண்டநந்தலையை சேர்ந்த, ஆனந்தன் மகன் சந்தோஷ்குமார், 18; ஆரோக்யராஜ் மகன் ஆரோக்யசாமி, 24; ஆனந்தன் மகன் பிரகாஷ், 18; பழைய சிறுவங்கூர் சின்னதுரை மகன் சதிஷ்குமார் 25; ராயபுரம் ஆரோக்யதாஸ் மகன் ஜான்டேவிட், 30; ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய, தொண்டநந்தல் தணிஸ்லாஸ் மகன் ஜோசப் அந்தோணி, மையனுர் இருதயசாமி மகன் தாஸ், ராயபுரம் பிரான்சிஸ் மகன் ஆண்டணி டிலக்ஸ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.