உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகளுக்கு அழைப்பு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு; வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் படிப்பு, தொழில்நுட்பத் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண் உற்பத்தியினை உயர்த்திடும் வகையில் ரூ.10 முதல் ரூ. 20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு முறையே ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த மையங்களில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்கள் விற்பனை செய்வதோடு, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின் திட்டத்தில் https://www.magrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணைய தள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.