கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., ஜீவா முன்னிலை வகித்தார். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் பழகத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து, ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஊர்வலம் சென்றனர். மேலும், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இளந்தென்றல் கலைக்குழுவினர் பாட்டு, மேள தாளம், நாடகம் மூலமாக போதைப் பொருள் பயன்பாடு ஒழிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலால் உதவி கமிஷனர் குப்புசாமி, கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், கலால் டி.எஸ்.பி., அறிவழகன், ஆய்வாளர்கள் குப்புசாமி, இளையராஜா, சுகன்யா, தேவி, கலால் பிரிவு கண்காணிப்பாளர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.