பட்டாவில் பெயர் நீக்கம் கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: பட்டாவில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர்கள் பெயர்களை சேர்க்க ஜமாபந்தியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற, நகர்ப்புற நிலங்களின் ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் எளிதில் பார்வையிடும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.அதனால், பட்டாவிலுள்ள இறந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ சேவை மையங்கள் அல்லது 'சிட்டிசன் போர்டல்' மூலம், விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.