உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காரீப் பருவ நெல், கம்பு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

காரீப் பருவ நெல், கம்பு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கம்பு பயிர்களுக்கு காப்பீடு செய்திட வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025 - 26ம் ஆண்டு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தாண்டு காரீப் பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் சொர்ணவாரி -1 பயிருக்கு வரும் 31ம் தேதியும், கம்பு பயிருக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும் காப்பீடு செய்ய கடைசி நாள். நெற்பயிருக்கு ஏக்கருக்கு 463 ரூபாய், கம்பு பயிருக்கு 237 ரூபாய் பிரீமிய கட்டணமாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம். அதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை தேவை. பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்திட வேண்டும். எனவே இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ