வன்கொடுமை தடுப்பு குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, தடுப்பு விதிகள் 1995, திருத்தப்பட்ட விதிகள் 2016 ஆகியவற்றின் செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வு, வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட உதவி மற்றும் மறுவாழ்வு குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள், இச்சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்கள் மற்றும் அமைப்புகளின் பங்கு, பணி குறித்தும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நிவாரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.