அரசு துவக்கப் பள்ளி முன் பெற்றோர்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி அரசு துவக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்துவதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாழடைந்த பள்ளியின் வகுப்பறை கட்டடம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் 2 மற்றும் 3ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வெளியே மரத்தடியில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.இதனையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் பள்ளியை முற்றுகையிட்டனர்.தகவலறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேரில் சென்று, விசாரணை நடத்தி, அங்கு வந்த சி.இ.ஓ., கார்த்திகாவிடம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் தற்காலிகமாக ெஷட் அமைத்து தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.