தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உரிய பணியாளர்களை நியமிக்க மனு
கள்ளக்குறிச்சி: தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் உரிய பணியாளர்களை நியமித்திட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் உரிய பயிற்சி பெறாத நபர்கள் பணியில் உள்ளனர். மேலும், உதவியாளர், கண்காணிப்பாளர், கணக்காளர் இல்லாததால் நுாற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளது. ஓய்வூதியம் பெறாமல் பலர் சிரமப்படுகின்றனர். அதேபோல், பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் தராமல் இருப்பதால் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவி தொகை கிடைப்பதில் தாமதம் நிலவுகிறது. எனவே, தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் உரிய பணியாளர்களை நியமித்திடவும், மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்குமாறு பள்ளிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.