மின் ஊழியரை மீட்க மறியல்
மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு நடந்தது. இப்பணியில் ஈடுபட்ட மின்வாரிய தற்காலிக ஊழியரான மூங்கில்துறைப்பட்டு, காமராஜ் நகர் திலீப்குமார், 45, என்பவர், மின் கம்பியை ஆற்றின் மறுகரைக்கு இழுத்துச் சென்ற போது, ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் இரவு 7:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு பொறியாளர் அலுவலகம்முன் திலீப்குமாரை மீட்க கோரியும், அவரை பணிக்கு அழைத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.மறியலில் ஈடுபட்டவர்களிடம், தாசில்தார் பாலகுரு உள்ளிட்ட அதிகாரிகள், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்த பிறகு மக்கள் 11:00 மணிக்கு மறியலை கைவிட்டனர்.மாலை 4:00 மணி வரை அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.