புதிய சுகாதார நிலைய கட்டடம் ஓராண்டாக திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் அவலம்
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்துள்ள முக்கனுார் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் ஓராண்டாக பூட்டிக்கிடக்கிறது. சங்கராபுரம் அடுத்த முக்கனுார் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் முக்கனுார், சிவபுரம், உலகுடையாம்பட்டு, ராஜபாண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வயதானவர்கள்,கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வந்து செல்கின்றனர்.இங்கு ஏற்கனவே இருந்த துணை சுகாதார நிலைய கட்டம் சிதிலமடைந்ததால் அதனை இடித்து விட்டு ரூ.40 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுமான பணி நடந்ததால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவரும் 10 கி.மீ., துாரத்தில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெறும் நிலை இருந்து வருகிறது. இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.முக்கனுார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.