பைக்குகள் நேருக்கு நேர் மோதல்; உளுந்துார்பேட்டையில் இருவர் பலி
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆதனுாரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோவிந்தன், 35; விவசாயி. இவர், நேற்று இரவு 7:00 மணிக்கு விவசாய நிலத்தி ற்கு சென்று விட்டு பைக்கில் குச்சிப்பாளையம் வழியாக வீட்டிற்கு திரும்பினார். எதிர் திசையில் பூவனுார் கிராமத்தை சேர்ந்த அழகேசன் மகன் சுப்புராயன், 32; ஓட்டி வந்த பைக்கில், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பாலகண்ணன் மகன் செல்வ கணபதி, 26; அமர்ந்து பயணித்தார். ஆதானுார் குச்சிப்பாளையம் குறுக்கு ரோடு அருகே சென்றபோது, கோவிந்தன் பைக் மற்றும் சுப்ராயன் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மூவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் கோவிந்தன், சுப்ராயன் இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த செல்வகணபதி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தபின் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.