| ADDED : ஜன 02, 2024 05:53 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் - போலீசாருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை, திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.இது போன்ற சம்பவங்கள் மற்றும் அசாம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கத்திலும், பொதுமக்களுக்கும், போலீசாருக்குமிடையே நல்லுறவை ஏற்படும் வகையிலும் கடந்த 2021ம் ஆண்டு, 'வில்லேஜ் விஜிலென்ஸ் போலீஸ்' என்ற கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் 4 முதல் 5 கிராமங்களுக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி, அந்த பகுதிக்கென நியமிக்கப்பட்ட காவலர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டது.மேலும், ஊரில் பொது இடங்களில் போலீசார் பெயர், தொடர்பு எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டு, 'வாட்ஸ் ஆப்' குழு தொடங்கப்பட்டது. ஊரில் நடைபெறும் திருவிழா, விளையாட்டுப் போட்டி, பிரச்னை, அசம்பாவிதம் குறித்த தகவலை பொதுமக்கள் 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவேற்றம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.கிராமங்களில் சிறிய பிரச்னைகள் நடந்தால் கூட போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பணியில் உள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நிலவும் பிரச்னையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.காலப்போக்கில் இந்த திட்டம் முறையாக செயல்படவில்லை. காவலர்கள் பலர் பணிமாறுதல் பெற்று சென்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறு காவலர்கள் நியமிக்கப்படவில்லை.இதனால் கிராமங்களில் நடைபெறும் பிரச்னைகள், குற்ற சம்பவங்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவதில்லை.குறிப்பாக, கிராமங்களில் கஞ்சா கலாசாரம் அதிகரித்துள்ளது. எனவே, பொலிவிழந்த நிலையில் உள்ள கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எஸ்.பி., சமயசிங் மீனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.