ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை அடுத்த அதையூர் கிராமத்தில் தொடர் மழையால் அப்பகுதி தெருக்கள் சேறும் சகதியுமாக மாறின. தேங்கி நின்ற மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:00 மணியளவில் எறையூர் - ரிஷிவந்தியம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் 11:30 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.