சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி திட்டம் துவங்குவது... எப்போது ; கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இணை மின் உற்பத்தி திட்ட பணிகளைமீண்டும் துவங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றை பிரதான பயிராக சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் கரும்பு சாகுபடி அதிகரித்ததால் கடந்த 1997 ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 துவங்கப்பட்டது.இந்த ஆலை நாளொன்றிற்கு 2500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது. மின் பற்றாக்குறையை போக்கவும், விவசாயிகள் பயனடையும் வகையிலும், மாநிலத்தில் உள்ள 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சார்க்கரை ஆலைகளில் நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் 12 முதல் 18 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 ல் கடந்த 2010 ம் ஆண்டு ஜூன் மாதம் 5 ம் தேதி, ரூ 78.49 கோடி மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. இங்கு அமைக்கப்படும் இணை மின் உற்பத்தி நிலையம் மூலம் தினம் 15 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆலை பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள 10 மெகா வாட் மின்சாரம் மின் வாரியத்திற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது.இந்த மின் உற்பத்தி திட்டத்திற்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொகை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளின் கரும்பு தொகையிலும் பிடித்தம் செய்யப்பட்டது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சடையம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மின் உற்பத்தி திட்ட பணிகளுக்கு முறையாக நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் துரு பிடித்து வீணாகி வருகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.அதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மின் உற்பத்தி நிலைய பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் 2018- 19 ம் ஆண்டின் அரவை பருவத்திலேயே மின் உற்பத்தி நிலையம் செயல்பட துவங்கும் என உறுதி அளித்தனர்.ஓரிரு மாதங்களில் மீண்டும் மின் உற்பத்தி நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு துவங்கப்பட்ட பணிகள் 14 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் முடிவடையவில்லை.நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளதாலும் பெரும் பகுதியான தளவாட பொருட்கள் அதிகளவில் துருப்பிடித்து உள்ளதாலும் அதன் தரமும் கேள்விக்குறியாகி உள்ளது.அரசு ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாய் விரையமாகியதுடன், விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணமும் அதற்கு பயனற்று உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., பொறுப்பு அமைச்சர், கூட்டுறவு துறை மற்றும் ஆலை நிர்வாக அதிகாரிகள் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போட்டப்பட்ட மின் உற்பத்தி நிலைய பணிகளை மீண்டும் துவங்கி, அதனை விரைவில் மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.