உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரிக்கும் திட்டம்... தயார்!

உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரிக்கும் திட்டம்... தயார்!

காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் பணிக்கு, ஊரக வளர்ச்சி துறையினர், ஊராட்சிகளை தேர்வு செய்து, வரைபடம் தயாரித்து கடந்த வாரம் கருத்துருகளை அரசிற்கு அனுப்பி உள்ளனர். அரசு ஒப்புதல் கொடுத்த பின், சாலவாக்கம் ஒன்றியம் தனியாக பிரிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், தமிழகத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களில், மிகப் பெரியது. இந்த ஒன்றியத்தில், 73 கிராம ஊராட்சிகளும், 368 குக்கிராமங்களும் உள்ளன.ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள சாலவாக்கம் பகுதியைச் சுற்றி, 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.அவற்றில் பினாயூர், பழவேரி, திருமுக்கூடல் போன்ற ஊராட்சிகள் வாலாஜாபாத் அருகிலும், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் போன்ற ஊராட்சிகள் செங்கல்பட்டு அருகிலும் அமைந்துள்ளன.இந்த ஊராட்சிகளில் வாழும் கிராமவாசிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், இரண்டு பேருந்துகள் பிடித்து, 25 கி.மீ., கடந்து, உத்திரமேரூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.மேலும், ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டு, நலத்திட்டப் பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.எனவே, உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, உத்திரமேரூரை தலைமையிடமாகக் கொண்டு, 38 ஊராட்சிகளும். சாலவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு, 35 ஊராட்சிகளும் கொண்ட புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டிய நிலை எழுந்தது.இதனால், ஒன்றியத்தை பிரிக்க, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, காஞ்சிபுரம் அண்ணா அரங்கில், அன்றைய மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் தலைமையில், கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.அதில், காஞ்சிபுரம் எம்.பி., உத்திரமேரூர் எம்.எல்.ஏ., பேரூராட்சித் தலைவர், ஊராட்சி தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், குடியிருப்பு சங்க பிரதிநிதிகள், கிராமவாசிகள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க, மக்கள் பிரதிநிதிகளால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து மேற்கண்ட பிரதிநிதிகளுடன் இரண்டாவது கருத்துக்கேட்பு கூட்டம் அதே மாதம் 26ம் தேதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்தது.அந்த கூட்டத்திலும் ஒன்றியத்தை பிரிப்பது தொடர்பான கருத்துகள் விவாதிக்கப்பட்டு, ஒன்றியத்தை பிரிப்பது என்ற முடிவு உறுதி செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு மாவட்டங்களை பிரித்து நடவடிக்கை எடுத்தது. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் பணி செய்யவில்லை.இந்நிலையில், 2021ம் ஆண்டு, தமிழகத்தில் தி.மு.க., அரசு ஆட்சி அமைந்த பின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன், 2021ம் ஆண்டு, ஜூலை மாதம் காஞ்சிபுரம் வந்திருந்தார்.அப்போது, உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரிக்க கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டது.இருப்பினும், ஊரக வளர்ச்சி துறையினர், தங்களின் வேலைகளில் முழு கவனம் செலுத்தி, உத்திரமேரூர், சாலவாக்கம் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்கும் விதமாக, ஊராட்சிகளை தேர்வு செய்து, வரைபடம் வரைந்து அரசிற்கு கருத்து அனுப்பி உள்ளனர். அரசு இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை.இந்த ஒன்றியம் பிரிக்கும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்தால், திருமுக்கூடல், பினாயூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிரமம் இன்றி சாலவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு செல்வது சவுகரியமாக இருக்கும். மேலும், ஊராட்சிகளில் நடைபெறும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்வதற்கு சவுகரியமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை, இரண்டாக பிரிக்க வேண்டியது குறித்து, அனைத்து விதமான திட்ட அறிக்கையை, துறை ரீதியாக தயாரித்து அரசிற்கு கடந்த வாரம் சமர்ப்பித்துள்ளோம். அரசுதான் ஒன்றியத்தை பிரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி