ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் ---- வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள ஒரகடம் சந்திப்பில், வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலத்தின் கீழே, ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது.தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் சாலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து, கார், பைக் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோவில் மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள், வண்டலுார், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, மேம்பாலத்தின் கீழ் திருப்பம் இல்லாததால், 2 கி.மீ., துாரம் மாத்துார் அருகே சென்று 'யூ- டர்ன்' எடுத்து மீண்டும் ஒரகடம் வந்து, இடதுபுறம் திரும்பி, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை வழியே வாகனங்கள் சென்று வந்தன. இதனால், நேரம் விரயம் மற்றும் வாகனங்களின் எரிபொருள் வீணாகுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த வாரம் இந்த சாலையில், தனியார் ஹோட்டல் அருகே, நெடுஞ்சாலையின் மீடியனை உடைத்து, புதியதாக யூ -டர்ன் ஏற்படுத்தப்பட்டது.இந்த நிலையில், தற்போது புதியதாக அமைக்கப்பட்ட யூ -டர்ன் குறித்து அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகை இல்லை. இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், எதிர் திசையான ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள், இந்த இடத்தில் தாறுமாறாக யூ - -டர்ன் எடுக்கும் வாகனங்களின் மீது மோதி, விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் யூ- டர்ன் குறித்து அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.