காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் திரையில் குழந்தை பிறப்பு விபரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தையின் விபரத்தை, வெளியே காத்திருக்கும் உறவினர்களுக்கு தெரிவிக்கும் வகையில், உடனாளர் காத்திருப்பு அறையில், டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஸ்குரோலிங் போர்டு' பொருத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையான பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு, 24 மணி நேரமும், மருத்துவர்கள் பணியில் இருப்பதால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, கர்ப்பிணியர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். தினமும், 20 - 35 பிரசவம் பார்க்கப்படுகிறது.இதில், பெரும்பாலும் சுகபிரசவமாக உள்ளது.குழந்தை பிறந்த விபரத்தை உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், உடனாளர் காத்திருப்பு அறையில் டிஜிட்டல் திரை' அமைக்கப்பட்டுள்ளது.இத்திரையில், ஒவ்வொரு நாளும், பிறக்கும் குழந்தையின் தன்மை ஆண், பெண், பெற்றோர் பெயர், நேரம், குழந்தையின் எடை உள்ளிட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது.வெளியே காத்திருக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு, இந்த, 'டிஜிட்டல் திரை' மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மேலும், மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் காஞ்சிபுரத்தில் காற்றில் உள்ள மாசு நிலவரத்தை தெரியப்படுத்தும் வகையில் டிஜிட்டல் திரை' அமைக்கப்பட்டுள்ளது.இதில், காற்றின் தரக் குறியீடு, நுண்ணிய துகள்களின் அளவு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, தரைமட்ட ஒசோன், சல்பர் டை ஆக்சைடு, வெப்ப நிலை, ஈரப்பதம் உள்ளிட்டவற்றின் அளவு தெரிவிக்கப்படுகிறது.இதன் வாயிலாக காஞ்சிபுரத்தில் உள்ள காற்றில் எவ்வளவு மாசு உள்ளது, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.