ரயிலை கவிழ்க்க சதி திட்டம்? கிராமங்களில் போலீஸ் விசாரணை!
திருவாலங்காடு, ஏப். 27-சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கம், திருவாலங்காடு - மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அரிசந்திராபுரம் பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றப்பட்டிருந்தது. இதனால், சிக்னல் துண்டிக்கப்பட்டது.இதையடுத்து, சிக்னல் பிரிவில் பணி செய்யும் ரயில்வே ஊழியர் செந்தில்குமார், சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை, உடனடியாக சென்று பார்வையிட்டார்.அப்போது, நான்காவது பாதையில், 'ரிவர்ஸ் லாக் ராடு'க்கான நட்டு, போல்டை கழற்றி, மர்ம கும்பல் எடுத்து சென்றது தெரிந்தது.உடனடியாக, ஈரோடில் இருந்து சென்னை நோக்கி, திருவாலங்காடு அருகே வந்து கொண்டிருந்த ஏற்காடு விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ரயில் தண்டவாளத்தையும், சிக்னலையும் இணைக்கும் பகுதி என்பதால், செந்தில்குமார் தெரிவித்த புகாரையடுத்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்தனர். அனைத்து ரயில்களும், மின்சார ரயில் செல்லும் பாதையில் திருப்பிவிடப்பட்டன. பழுது நீக்கப்பட்டு, ஒன்பது மணி நேரத்திற்கு பின் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.ரயில் கவிழ்க்க சதியாக இருக்கலாம் என கருதிய ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் என மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் திருவலாங்காடு ரயில் நிலைய அதிகாரி தணிகைமலை புகாரின்படி அரக்கோணம் ரயில்வே போலீசார், ரயிலை கவிழ்க்க சதி செய்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் சதி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு அடிப்படையில், அரிச்சந்திராபுரம், சின்னம்மாபேட்டை, வியாசபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.