எரிவாயு தகனமேடை அமைப்பதில் இழுபறி மாநகராட்சி கவுன்சிலர் கலெக்டரிடம் புகார்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நாகலுத்துமேடு மயானத்தில், எரிவாயு தகனமேடை அமைக்காமல், இழுத்தடித்து வருவதாக, 23வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2021- - 22ல், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், நாகலுத்துமேடு மயானத்தில், மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 கோடி ரூபாய் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், தகனமேடை பணியில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தாமதம் ஆவதால், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர், சடலத்தை தகனம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் கலெக்டர் நேரடியாக, இப்பணியை பார்வையிட்டு, எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.