தீர்மானங்கள் மீது நடவடிக்கை கோரி கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது, ம.தி.மு.க, - சிவசங்கரி: வாலாஜாபாத் பேரூராட்சி 10வது வார்டில், கான்கிரீட் சாலைகள் அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் பணிகள் நடக்காமல் கிடப்பில் உள்ளன. செயல் அலுவலர் - பழனிக்குமார்: தீர்மானம் போடப்பட்டுள்ளவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க., - வெங்கடேசன்: வாலாஜாபாத் முழுக்க தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளது. செயல் அலுவலர் - பழனிக்குமார்: நீதிமன்ற ஆணை மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தெரு நாய்கள் பிடிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வி.சி., - அசோக்குமார்: வாலாஜாபாத் 1வது வார்டில், பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் துார்வாராமல் உள்ளது. வரும் பருவ மழை காலத்திற்குள் அனைத்து கால்வாய்களையும் துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட வல்லப்பாக்கம், சாய்நகர் மற்றும் சின்னசாமிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பூங்காக்களை முறையாக பராமரிக்கவும், பூங்காக்களில் கூடுதல் விளையாட்டு உபகரணப்பொருட்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர் வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக செயல் அலுவலர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.