கனரக வாகனங்களால் சேதமான சாலை புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், சிறுதாமூர், மதுார் சுற்றுவட்டார பகுதிகளில், தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்குகின்றன.இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் ஏராளமான கனரக வாகனங்கள், கிராம சாலைகள் மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி சென்று வருகின்றன.இரவு, பகலாக இயங்கும் இந்த வாகனங்களால், மதுார், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட பகுதிகளின் தார் சாலைகள், ஆங்காங்கே சேதமடைந்து, புழுதி பறக்கும் சாலையாக மாறி வருகிறது.இச்சாலைகளில், மண் புழுதி பறக்கமால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், லாரியில் தண்ணீர் எடுத்து வந்து, புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் ஊற்றும் நடவடிக்கை இருந்து வருகிறது.எனினும், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே சாலையில் தண்ணீர் ஊற்றுவதாகவும், தண்ணீர் ஊற்றாத நாட்களில், சாலையில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, புழுதி பறக்கும் இந்த சாலைகளில், தினசரி தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.