பயன்பாடற்ற அரசு கட்டடங்களை இடித்து அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது நத்தாநல்லுார் கிராமம். இந்த கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நீர்வள, நிலவளம் திட்ட தகவல் மையம் போன்றவை இயங்கி வந்தன.இக்கட்டடங்கள் மிகவும் பழுதடைந்ததையடுத்து அவை கைவிடப்பட்ட கட்டடங்களாக தற்போது உள்ளன. அக்கட்டடத்தால் விபத்து அபாயம் ஏற்படக்கூடும் என அப்பகுதியினர் அச்சப்பட்டு வந்தனர்.இதனிடையே, கடந்த மாதம், தொடக்கப் பள்ளிக்கான ஒரு கட்டடம் மட்டும் இடித்து அகற்றப்பட்டு, அதே பகுதியில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. மற்ற இரண்டு பொது கட்டடங்கள் அதே நிலையில் உள்ளன.இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதோடு, கட்டடத்தை சுற்றி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக அப்பகுதியினர் அஞ்சுகின்றனர்.இதனால், இரவு நேரங்களில் அப்பகுதி சாலையோரம் நடந்த செல்ல அச்சப்படுகின்றனர்.எனவே, நத்தாநல்லுார் கிராமத்தில் கைவிடப்பட்ட பழைய கட்டடத்தை சுற்றி சுகாதாரமாக வைத்திருப்பதோடு, விரைவாக அக்கட்டடத்தை அகற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.