பார்க்கிங் வசதி இல்லாததால் திருப்புட்குழியில் பக்தர்கள் அவதி
பாலுச்செட்டிசத்திரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் அமாவாசை மற்றும் நேர்த்திக்கடன் செய்ய, பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனங்களில், வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு, போதிய இட வசதி இல்லை. இதனால், வீடுகள் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.எனவே, திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இருசக்கரம் மற்றும் நான்குசக்கர வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‛கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.