தீபாவளி போனஸ் தகராறு நண்பரை குத்தியவருக்கு வலை
குன்றத்துார்:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்,40, சென்னை, ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த ரஞ்சித்குமார்,47, ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள், குன்றத்துார் அருகே தண்டலத்தில் தங்கி, அதே பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வெல்டர்களாக பணியாற்றி வந்தனர்.நேற்று ஞாயிறுக்கிழமை விடுமுறை என்பதால், இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, கம்பெனியில் தனக்கு தீபாவளி போனஸ் குறைவாக கொடுக்கப்பட்டதாக, ஆனந்தராஜ் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.இதில் கோபமடைந்த ஆனந்தராஜ், காய்கறி வெட்டும் கத்தியால், ரஞ்சித்குமார் மார்பில் குத்திவிட்டு தலைமறைவானார். ரத்தம் வெளியேறி மயங்கிக் கிடந்த ரஞ்சித்குமாரை, அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, ரஞ்சித்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.