சர்வீஸ் சாலையில் பாயும் கழிவுநீரால் மாத்துாரில் சீர்கேடு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம், சென்னக்குப்பம், மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், போந்துார், வடகால் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரகடம் அடுத்த மாத்துார் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் -- ஒரகடம் மார்க்கமாக செல்லும் சாலையோரம், மழைநீர் வடிகால் முழுமை பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சார்வீஸ் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக, சர்வீஸ் சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.