உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் எழில்வனத்தில் அரசு அலுவலகம்: சீமான் எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதுார் எழில்வனத்தில் அரசு அலுவலகம்: சீமான் எதிர்ப்பு

சென்னை, 'ஸ்ரீபெரும்புதுாரில் முதல் நகர்ப்புற காடான எழில்வனத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் முடிவை அரசு திரும்ப பெற வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீபெரும்புதுாரில் அரசுக்கு சொந்தமான எழில் வனம், 5,000க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த காடு பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மற்றும் அரண் என்ற தன்னார்வலர் அமைப்பின் உழைப்பில் வளர்க்கப்பட்டது. இந்த இடத்தில், 2021ல் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க ஒதுக்கியபோது எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால், எவ்வித கட்டுமான பணியையும் செய்யும் திட்டமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அரண் அமைப்பினர் மற்றும் பொதுமக்களை எழில்வனத்தில் உள்ளே அனுமதிக்க மறுத்து இருப்பதுடன், வட்டார போக்குவரத்து அலுவலகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கட்டட அளவீட்டு பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பால், பழைய நிலைக்கு அனைத்தையும் மாற்றி அமைத்தாலும், வாய்மொழி உறுதிகள் நிரந்தர தீர்வாகாது. அரசின் புறம்போக்கு நிலங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில், மரங்கள் பெருமளவில் வளர்ந்த பகுதியை தேர்ந்தெடுத்து அலுவலகம் அமைப்பது அறிவற்ற செயல். கட்டுமான பணிகளுக்காக மரங்கள் வெட்ட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எழில்வனத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !