சரி சமமான இழப்பீடு கோரி குணகரம்பாக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு, சரி சமமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, குணகரம்பாக்கம் கிராமத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரமங்கலம் அடுத்த, குணகரம்பாக்கம் கிராமத்தினரின் விளை நிலங்களை, பரந்துார் விமான நிலையத்திற்கு கையகப்படுத்த உள்ளனர். இதற்கு, தமிழக அரசு நிர்ணயம் செய்த இழப்பீடு தொகை, பிற கிராம நிலங்களை காட்டிலும் குணகரம்பாக்கம் கிராமத்திற்கு குறைவான தொகை வழங்கப்படுகிறது.பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு சரி சமமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, நேற்று, குணகரம்பாக்கம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் கிராம மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல, பரந்துார் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தவிருக்கும் 13 கிராமத்தினருக்கும் சரி சமமாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, பரந்துார் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர், 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.