சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து கோனேரிகுப்பம், ஏனாத்துார், வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் தாமல்வார் தெரு வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இத்தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சாலையில் கழிவுநீர் செல்கிறது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவு நீர் தெளிக்கிறது. ரேஷன்கடைக்கு செல்வோரும், அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகளும் கழவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.