மேம்பால பணியால் படப்பை வழியே கனரக வாகனம் செல்ல அனுமதி மறுப்பு வரிசைகட்டிய வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று சென்று வருகின்றன.இந்த சாலையில் உள்ள படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், 2022 ஜன., மாதம் துவங்கி, மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடந்து வருகிறது.பாலப்பணியால் சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டன. இதனால், சாலை குறுகலாகி, போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்தது. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் பாறை, ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் அதிகளவில் செல்கிறது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏற்றிகொண்டு ஏராளமான கன்டெய்னர் வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன.'பீக் ஹவர்' நேரங்களில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்துகள், ஒரே நேரத்தில் அதிகளவில் வருவதால், காலை - மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.இதனால், படப்பை வழியே லாரி, கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல் ஒரகடத்தில் இருந்து வரும் கனரக வாகனங்களை படப்பை வழியாக செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்தனர்.காரணித்தாங்கல் சந்திப்பில் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி, ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில் வழியாக வண்டலுார் செல்ல அறிவுறுத்தினர்.இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரம் வரிசைக்கட்டி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சாலையோரம் நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.