களியனுார் ஊராட்சியினர் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு நுாறு நாள் வேலை பறிபோவதாக கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 405 பேர், பட்டா, ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த, 24 பயனாளிகளுக்கு, 3.45 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.இக்கூட்டத்தில், கீழ்கதிர்பூர் மற்றும் களியனுார் ஆகிய கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமத்தினர், தங்கள் ஊராட்சிகளை, காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என, மனு அளித்தனர். கிராமத்தினர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி இருப்பதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் மனுவில் தெரிவித்து உள்ளனர்.காவாந்தண்டலம் ஏரி நீர் பாசன சங்க தலைவர் குமார் அளித்த மனு:காஞ்சிபுரம் ஒன்றியம், காவாந்தண்டலம் கிராமத்தில், 900 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு, எட்டு ஆண்டுகளாக நீர்வரத்து இல்லை. எங்கள் ஏரிக்கு, வெங்கச்சேரி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வர வேண்டும்.ஆனால், நீர்வரத்து கால்வாயில், 10 மீட்டர் துாரத்துக்கு ஓட்டை உள்ளது. மேலும் கால்வாய் சேதமாகியும் உள்ளது. இதனால், ஏரிக்கு தண்ணீர் வர முடியாத நிலை உள்ளது. கால்வாயை சீரமைத்து, தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஊற்றி
தற்கொலைக்கு முயன்ற பெண்கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி, 60, என்ற மூதாட்டி, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால், கூட்டரங்கில் இருந்த அரசு ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், அதிகாரிகள், உடனடியாக, பெண்ணை மடக்கி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்.அவரிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கல் அரைக்கும் இயந்திரங்களை சிலர் திருடிச் சென்றதாகவும், திருடியவரை பிடித்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை சமாதானம் செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.