உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஏர்போர்ட்டிற்குள் சிக்கும் கம்பன் கால்வாய் மாற்று திட்டம்: புதிதாக 8 கி.மீ., நீர்வழித்தடம் அமைக்க அரசு முடிவு

பரந்துார் ஏர்போர்ட்டிற்குள் சிக்கும் கம்பன் கால்வாய் மாற்று திட்டம்: புதிதாக 8 கி.மீ., நீர்வழித்தடம் அமைக்க அரசு முடிவு

காஞ்சிபுரம்: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதால், முக்கிய நீர் வழித்தடமான கம்பன் கால்வாய், 6 கி.மீ., பாதிக்கும் சூழல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 8 கி.மீ., மாற்று வழி கால்வாய் அமைத்து தண்ணீர் எடுத்துச் செல்ல, நீர்வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில், கம்பன் கால்வாய் என்ற முக்கிய நீர் வழித்தடம் துவங்குகிறது. அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, 44 கி.மீ., கடந்து, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடைகிறது. 5,320 ஏக்கர் நிலம் இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையவிருக்கும் பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 20 கிராமங்களில், 5,320 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியாரிடம் இருக்கும், 3,331 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரம் பதிவு செய்து, பணம் வழங்கும் பணியை, தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் துவக்கியுள்ளது. இந்த பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையகப்படுத்தும் நிலங்களின் குறுக்கே, 6 கி.மீ., கம்பன் கால்வாய் கடப்பதால், புதிய விமான நிலையம் அமைந்தால், கம்பன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், விமான நிலைய திட்டம் பாதிக்காத வகையில், கம்பன் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரை, மாற்று வழியில் எடுத்துச் செல்ல, நீர்வள ஆதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும் கம்பன் கால்வாயை, பரந்துார் ஊராட்சி காட்டுப்பட்டூர் கிராம எல்லையுடன் துண்டிக்கப்பட உள்ளன. புதிய கால்வாய் பரந்துார் -- -காட்டுப் பட்டூர் கிராமத்தில் துவங்கும் புதிய கால்வாய், மேல்பொடவூர், தொடூர், கள்ளிப்பட்டு, சிங்கிலிபாடி ஆகிய கிராமங்களின் வழியாக, கண்ணன்தாங்கல் கிராம கூட்டு சாலை வழியாக மீண்டும் கம்பன் கால்வாயில் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய கால்வாய், 8 கி.மீ., அமைக்கப்பட உள்ளன. மேலும், தற்போது இருக்கும் அகலத்தில் இருந்து, கூடுதலாக 2 மீட்டர் அகலம் கூட்டுவதற்கு, நீர் வளத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாக, கூடுதல் ஏரிகள் தண்ணீர் நிரம்ப வாய்ப்புகள் உள்ளதாக, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பரந்துார் விமான நிலைய திட்டத்திற்குள், 6 கி.மீ., கம்பன் கால்வாய் அடி படுகிறது. இதற்கு பதிலாக, 8 கி.மீ., மாற்று வழி ஏற்படுத்தி புதிய கால்வாய் எடுக்கப்பட உள்ளது. இந்த புதிய கால்வாய், ஏற்கனவே உள்ள கம்பன் கால்வாயை காட்டிலும், 2 மீட்டர் அகலம் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. தண்ணீர் எளிதாக செல்லும் வகையில், புதிய கால்வாய் வடிவமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக மாற்று திட்டத்திற்கு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் பிறகே திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !