காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டடம் புதுப்பிக்க கோரிக்கை வேளாண் சங்க கட்டடம் சீரமைப்பு பணி எப்போது?
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தாவரத்தில், காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கி இயங்கி வருகிறது.அரும்புலியூர், சீத்தாவரம், பேரணக்காவூர், காவணிப்பாக்கம், அருங்குன்றம், பழவேரி மதுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலகம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்குகிறது. இதனால், மழைக்காலத்தில் கூரை வழியாக நீர் சொட்டுவதால், ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், கட்டடத்தின் பக்கவாட்டு பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால், கட்டடத்தில் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, காவணிப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலக கட்டடத்திற்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.